Pages

Thursday, August 19, 2010

மீட்சியற்ற பாடலில் மொய்க்கும் எறும்புகள்


நிலவறைத் தரிப்பிடத்தில் மாட்டிக்கொண்ட
சிறு பறவை - தன் வானம் தேடி
ஓயாச் சிறகடிப்பில் தவித்தது

யாரும் உதவ முடியா பெருங்குழியை
சிறகு கொண்டு தூர்க்க
கருணை ததும்பும் குரலெடுத்து
கூர் நாக்கு வலித்தது

கீழிறங்கும் பூமியில்
மேல் நோக்கி பறக்கும் பறவையை
விந்தை என்றபடி மாந்தர் கடந்தனர்.

தன்னை நோக்கி ஊர ஆரம்பிக்கும் எறும்புகளை
பார்க்கத் திறந்த விழியோடு
நரகக் குழியின் மனிதர்களை சபித்து
மரித்து கிடந்ததது பறவை.

எவரையும் சபிக்க முடியாக் குழிகளில்
கழிகிறது பொழுது
அறிந்தே தவறிய பயணத்தில்
விரிந்தே வலிக்கும் சிறகுகள்

வேகத்தெருவும் விண்முட்டும் வீடும்
போகப் பொழுதும் - நமக்கான குழிகள்
திசை தேடி கசிகிறது பாடல்
நமக்கான எறும்புகள் ஊரத்தொடங்குகிறது...

No comments:

Post a Comment