Pages

Friday, August 13, 2010

தரை வழிந்திருக்கும் சூரியன்!

நிர்வாணம் அணிந்திருந்த மனிதர்களை
நோக்கி
வரிசையாய் விளித்தது -
அதிகாரத்தின் முனைவிழிகள்
விசை எனும் பெருங்கருணை ததும்பும் உயிர் கொண்டு...

தரை பிளந்திருந்த தரவைஎங்கும்
சமாதானப் பூக்கள் விரிந்தன
இனிகருவுரும் மகரந்தங்களை தூவியபடி.... \
அருகாமைச் சிரிப்பொலி என

குருதி சூரியனாகி மணம் வீசிய
மாலையில்
நிலத்தில் வழிந்திருந்தது சூரியன்!
தன்னை மிதித்தலையும் விழிகளின் சாட்சியாய்!!

பிடரி துளையிட பிளந்து கிடந்த
பிணங்கள் உயிர்த்துக் கிடந்த தரையில்
இருந்து தடயங்கள் முளைத்தன
தலை பருத்த காளான்களாய்..

இத்தனைக்கும் முன்பே
இனிது கொல்லப்பட்டிருந்தது இவ்வுலகு
கண்கள் திறந்திருக்க...

(நிர்வாண மனிதர்களை வரிசையாக துப்பாக்கிகளால் சுடுவது தொடர்பில் காணொளி வெளியாகி ஏறத்தாள ஒரு வருடமாகும் நிலையில் கடந்த 10 /10 /2009 எனது முகப்புத்தகத்தில் எழுதப்பட்ட கவிதை இது)

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete