Pages

Sunday, July 5, 2009

அப்பா, நான் மற்றும் நாக்கிழந்த பொம்மை நாய்க்குட்டி..

அப்பா...!
நமக்கான புரிதல்களின் முரணை பேச இருக்கிறது
அம்மாவும் அறியாமல்...

எனது நான்காம் வயதில்
எனக்கு தந்த குரைக்கும் நாக்குட்டிப் பொம்மையை
எனக்கு பிடிக்காது போன தருணத்தில்
அதன் சிவத்த நாக்கை பிடுங்கி மழையில் எறிந்தேன்
நாக்கு மழையில் நீந்தித் தொலைந்த போதும்
நாய்க்குட்டி குரைத்துக் கொண்டேயிருந்தது!

பிற்பாடு ...
ஏனென்று தெரியாத பிரியங்களின் வரட்சி
சொற்களின் நாக்கை பிடுங்கி எறிந்தபோதும்
நமக்கான இடைவெளிகளை
நமது சகோதரிமார் நிரப்பிக்கொண்டபோதும்
நான் பேச இருந்தது உண்டு உன்னோடு
பேசாமல் மறந்ததுண்டு என்னோடு

நாங்கள் பேசிய இரவுதனில்
என்னோடும் உன்னோடும் எச்சில் வைத்த மிச்சத் தேநீரை பருகியபடி அழையா விருந்தாளியாய் அமர்ந்திருந்தது மரணம்!

வைத்தியசாலைகளின் இரவுகள் உணர்தலால் ஆனவை
அந்த இரவுகளுக்கு புலன்கள் இருந்தன
என் தகப்பனாய் நீ என்னைப் பேசினாய்
நமக்கான தருணங்களில் மௌனமாய் இருந்தது மரணம்
எமக்கான வரட்சியில் கண்ணீரை சிந்தினோம்.

உறவின் தொடர்ச்சி ஒரு நாய்க்குட்டியை போல
குரைத்துக்கொண்டே இருக்கிறது
நாக்குகள் குறித்த கவலைகள் அற்று..