Pages

Tuesday, August 31, 2010

திருமண வரவேற்பு தின வாழ்த்துக் கவிதை - சுதன் மதனிகா (23 .01 .2010)

பசை பூசிய ஞாபகச் சுவரெங்கும் நம் நட்பு மின்மினிகள்
அசை போடும் தருணங்களில்
அலையாகிறது நாம் இருந்த நிமிடங்கள்
துணை கொள்ள பிரியமான தோழன் சுதன் - மதனியோடு இணைகொண்டு சுகம் சேரும் நாளிது!

கவி கொண்டு வாழ்த்தினோம்!
நூறும் புகுக நலம் நாளும் மிகுக,
நற்றமிழெனவே அணி கொண்டு வாழ்க!

மாலையில் இணைந்தது இரண்டு மனங்கள்
நாணங்கள் இனித் தொடர்கின்ற தினங்கள்
நல்ல பேச்சு நலமான சிரிப்பு - வல்லமை உந்தன் எழுத்து
வில் வளைத்து வென்றனன் நங்கை - வாழ்த்துகள்

மதிமுகத்து மங்கையாம் மதனிகா
மதி நிறைந்த மணவாளன் சுதன்
மனதிணைந்த மணவிழாக்காட்சி
உங்கள் மகிழ்வுக்கிலக்கணம் மாங்கல்யசாட்சி

இவனோடு இவளாகி ...
சிவனோடு உமையாகி
சிறப்பான துணையாகி -
சீர் மிகுந்து நீர் வாழ்க

கவினூறும் பதினாறும் கொள்க!
கலைகொள்ளும் திறன்யாவும் வெல்க
உடலோடு உயிர்
கொண்டுறைக உங்கள்உளம்நாளும் இனிதாலே மல்க

அனுதினமும் நீங்கள் அன்றிலின் சிறகுகள்
உங்கள் அன்புக்கில்லை அடைக்கும் கதவுகள்
தாள் திறக்கும் காதலின் சாகரம் வாழ்வில்
இன்பத் தளிர் துளிர்க்கும் கைகளில் சீக்கிரம்

வாழ்த்துகள் வந்து நிதம் உம்மைப் பாடும்
வருங்காலம் வாழ்க்கைக்கோர் உவமை கொள்ள உம்மை தேடும் -

வாழ்க வாழ்க வாழ்கவென நெடிது வாழ்த்தி - விடைபெறும் நண்பர்கள் நாம்

.......................

அலை வந்து

மணல் கொண்டு போகும் - ஆனாலும்

கரை என்றும் கடலோடு வாழும்...

துயர் அடிக்க பிரிவதில்லை

பிரியத்தின் மலை

நம் விரல் இடுக்கில் நிரம்பியது

அன்பெனும் அலை

.............................

நீ என்பது நீல வானம்
நெஞ்சோடு
உதயங்களும் - அஸ்தமனங்களும்
உந்தனுக்கில்லை

Wednesday, August 25, 2010

இப்படியாய்ச் சில குரல்கள்........

ஞாபக இடுக்கில் துயர் தரும் நினைவுகளை
மறக்க விடிகிறது
அடுத்த நாள்

தண்ணிக் குடங்களின் நீண்ட வரிசையை
கால்களால் தட்டும் சிறுவனின்
நக இடுக்கில் கிடக்கிறது
கைகளால் கிண்டிய பதுங்குகுழிகளின்
பிடிமண் உலராமலும் உதிராமலும்..

பறக்கத் திராணியற்றுப்
பல்கிப்போன இலையான்கள் மரணிக்கின்றன -
நேற்றைய மனிதர்கள் போல

நாளைக்கு காய இருக்கும்
காயத்தின் பகுதியை தடவுகிறான்
ஒருவன் - இல்லாத கையால் ....

உலவ விடுங்கள், ஓட விடுங்கள், பழக விடுங்கள் என்ற
மருத்துவரின் அறிவுறுத்தல் பெற்ற
மனம் பிறழ்ந்த குழந்தையை சுமந்து மீண்டு(ம்) வருகிறது ஊர்தி
அதே முகாமுக்கு - அடுத்த குழந்தையை சுமக்க

ஒலிபெருக்கிகள் ஓய்ந்து விட்ட பொழுதில்
புதைகுழிகள் ஆரம்பித்திருக்கும் - எனினும்
ஒப்பிட்டு புறக்கணிக்க சொல்லித்தருகிறார்கள்
இப்போதைய மரணங்களை.

சகலமும் மரணித்திருந்த பொழுதொன்றில்..
நியாயங்கேட்கும் குரல்கள்
ஒலியில்லாதவை! நிறமில்லாதவை !!
அவை குரல்களாவே இராதவை !!!.

(முகப் புத்தகக் குறிப்புகள் - ஆனி 03 2009 )

..................

நாட்சருகில் கால் புதைய
நீள்பொழுது நடக்கையில்
கலையும்
நினைவுத் தோலுரித்து தூங்கும் சர்ப்பம்

இரண்டு சிரிப்புகளின் முடிவில்... ..

அபத்தமான கேள்விகளின் விளிம்பில்
அகப்படுவது நானானபோதிலும்.
விக்கிரமாதித்தன் வேதாளமாய்
கேள்விகள் என்னை விடுவதாயில்லை!!

ஒரு நாளின் உதிரும் மாலையில் உன்னைக் கேட்டேன்...
என் மனைவியை எப்படி வரைந்து வைத்தேன் தெரியுமா? -என்று
நீ சதாரணமாய்ச் சிரித்தாய்..

நானறிந்த இலக்கியமும்,
நன்கறிந்த சினிமாவும் கற்பனையில் ஊற ஊற
நானேதோ உளறியது நினைவில் இல்லை..

வினாடியின் விளிம்பில்
என் வாயில் வழிந்தது கேள்வி மீண்டும் ..

உனக்கு வரும் கணவனை......
கேள்வியை நான் முடிக்க முன்னும்
நீ சிரித்தாய்..

அது சாதாரணமாய் தோன்றவில்லை எனக்கு

Friday, August 20, 2010

சிறை கிடக்கும் சொற்கள்...

நன்று நன்று என்று
நாம் மகிழ்ந்த கவிதையின்
பொருளை தந்தது சிறைகிடந்த ஒரு சொல்


ஒரு சொல்லை சிறைவைத்துத்தான்
எமக்கான கவிதையை நீங்கள் எழுதுவீர்களானால் ....
அந்த கவிதை தேவையே இல்லை சகோதரனே!

மௌனம் எமக்கான வழக்கை பேசி முடிக்கட்டும்.
விதிக்கப்பட்டது குறித்து, விதி வருந்தட்டும்!

கவிதையின் அடைப்புள் ஒரு சொல் கிடக்குமெனில்
அதைவிட வேறென்ன விடுதலையை
கவிதை பேசிவிடப்போகிறது?

பெருந்துயரமாக இருக்கிறது அந்தச்
சொல்லின் சிறை குறித்து ...

எனக்கென்னவோ அந்தச் சொல்லின் சிறையில்
தமக்கான விடுதலையை எண்ணி
மற்றச் சொற்கள் மகிழ்வதாய் தோன்றுகிறது.

சகோதரனே!
உண்மையில் சிறை வைக்கப்பட்டிருக்கும்
அந்தச் சிறு சொல்லுக்கு - எதுவும் தெரியாது
கவிதை குறித்தும் கவிதைக்கு அதன் உபயோகம் குறித்தும்.

எழுதுகின்ற பெருந்தலைவ!
உனக்கு எப்படி எடுத்துச் சொல்வேன்?..
குழலை யாழை மேவும் பெருஞ்சொல்
மழலை என்று!.

(..மானுட, தேசிய, சமூக, பொருளாதார மீட்சிக்காய் உலகம் முழுதும் சிறை வைக்கப்படும் சிறு சொல்பேசிகளுக்கு..)

Thursday, August 19, 2010

மீட்சியற்ற பாடலில் மொய்க்கும் எறும்புகள்


நிலவறைத் தரிப்பிடத்தில் மாட்டிக்கொண்ட
சிறு பறவை - தன் வானம் தேடி
ஓயாச் சிறகடிப்பில் தவித்தது

யாரும் உதவ முடியா பெருங்குழியை
சிறகு கொண்டு தூர்க்க
கருணை ததும்பும் குரலெடுத்து
கூர் நாக்கு வலித்தது

கீழிறங்கும் பூமியில்
மேல் நோக்கி பறக்கும் பறவையை
விந்தை என்றபடி மாந்தர் கடந்தனர்.

தன்னை நோக்கி ஊர ஆரம்பிக்கும் எறும்புகளை
பார்க்கத் திறந்த விழியோடு
நரகக் குழியின் மனிதர்களை சபித்து
மரித்து கிடந்ததது பறவை.

எவரையும் சபிக்க முடியாக் குழிகளில்
கழிகிறது பொழுது
அறிந்தே தவறிய பயணத்தில்
விரிந்தே வலிக்கும் சிறகுகள்

வேகத்தெருவும் விண்முட்டும் வீடும்
போகப் பொழுதும் - நமக்கான குழிகள்
திசை தேடி கசிகிறது பாடல்
நமக்கான எறும்புகள் ஊரத்தொடங்குகிறது...

Sunday, August 15, 2010

பூர்வீகம் மறுக்கப்பட்ட நிலங்களில் புதைந்திருக்கும் கனவுகள்.

மொறேவேவா - பன்குளக் காடுகளில்
முப்பதாண்டுகளின் முன் - அப்பாக்கள்
முள் கிழிக்காத கனவுகளின் சொந்தக்காரர்கள்.

கரடி துரத்தி இங்குதான்
காடு பிரித்தார்கள் - கனவு நுரைக்க
கைபிடித்த மனைவிமாருடன்.

வேர் கிளப்பி ஏர் புதைத்த போதும்
வியர்வைத்துளி கிணற்றில் நீர் நிறைத்த போதும்
தங்கள் கனவுகளுக்கு வண்ணம் பூசிக் கொண்டார்கள்

இப்படித்தான் இருந்தன ..
அம்மாக்களுக்கு பிள்ளைகளாய் நாமும்
அப்பாக்களுக்கு கனவுகளாய் அவையும்.....

அதிகாரத்தின் கரங்கள் - குருதி வழிய
சூரியனை கைது செய்திருந்த பகலொன்றில்
அவர்கள் விரல் புதைந்த சேற்றில் இருந்து
நிலம் பிரிந்தார்கள்.

பிற்பாடு
நிலமிழந்த மனிதர்கள்
கனவு கிழிந்த கண்களோடு, கடவுச்சீட்டுக்காய் புன்னகைத்தார்கள்.
நித்தியம் நோக்கிய பயணங்களில்
மத்திய கிழக்குக்கு பெயர்ந்தார்கள்.

பண்ணையாளன் தன்மானம்
முசல்மான்களிடம் அடகு வைக்கப்படுகையில்
அவர்கள் முடியிழக்க ஆரம்பித்தார்கள்.
முறைக்கு முறை கடவுசீட்டுகளை புதுப்பித்துக்கொண்டார்கள்
மீண்டும் காடாகியது அவர்கள் கிணற்றடி.

இப்படித்தான் உதிர்ந்தது அவர்கள் கனவு

மரணம் - தன் படுக்கையோரத்தில் அனுமதிக்கும்
உரையாடல்கள் வார்த்தைகளால் மட்டும் ஆவதில்லை
புலன்களை வாசிக்கும் அப்பொழுதுகளுக்கு இறப்பில்லை
நினைவின் சுழலில் - கனவின் துகளை மறைக்க
முயன்று தோற்ற மனிதன்,
"பண்ணையாளனாய் இருந்திருக்க வேண்டியது.." என்ற
பேச்சோடு மூச்சை விட்டான்.

கனவுகள் அழிக்கப்பட்ட நிலங்கள்
இப்போது திரும்பி வருகின்றன...,
அப்பாக்களின் பெயரைச் சரியாய் சொன்னபடி
நிலம் குறித்தான அம்மாக்களின்
தொலைபேச்சில் மீள்குடியேறுகிறது - அப்பாக்களின் புன்னகை

நாங்கள் பெறுமதி குறித்தான சிந்தனைகளுடனும்,
farm ville இல் fan களாக இருக்கும் அவர்கள் பேரகுழந்தைகளுடனும்,
மீட்சியற்ற தருணங்களில்
பிரக்ஞையற்று இருக்கிறோம்
அவ்வபோது இதுபோல எதிர்காலமிழந்த கவிதைகளை எழுதிக்கொண்டு..

( "farm ville" - facebook myspace முதலிய சமூக தளங்களில் பெருவாரியாக விளையாடப்படும் ஒரு கற்பனாவாத விவசாயம் தொடர்பான பொழுதுபோக்கு விளையாட்டு)

Friday, August 13, 2010

தரை வழிந்திருக்கும் சூரியன்!

நிர்வாணம் அணிந்திருந்த மனிதர்களை
நோக்கி
வரிசையாய் விளித்தது -
அதிகாரத்தின் முனைவிழிகள்
விசை எனும் பெருங்கருணை ததும்பும் உயிர் கொண்டு...

தரை பிளந்திருந்த தரவைஎங்கும்
சமாதானப் பூக்கள் விரிந்தன
இனிகருவுரும் மகரந்தங்களை தூவியபடி.... \
அருகாமைச் சிரிப்பொலி என

குருதி சூரியனாகி மணம் வீசிய
மாலையில்
நிலத்தில் வழிந்திருந்தது சூரியன்!
தன்னை மிதித்தலையும் விழிகளின் சாட்சியாய்!!

பிடரி துளையிட பிளந்து கிடந்த
பிணங்கள் உயிர்த்துக் கிடந்த தரையில்
இருந்து தடயங்கள் முளைத்தன
தலை பருத்த காளான்களாய்..

இத்தனைக்கும் முன்பே
இனிது கொல்லப்பட்டிருந்தது இவ்வுலகு
கண்கள் திறந்திருக்க...

(நிர்வாண மனிதர்களை வரிசையாக துப்பாக்கிகளால் சுடுவது தொடர்பில் காணொளி வெளியாகி ஏறத்தாள ஒரு வருடமாகும் நிலையில் கடந்த 10 /10 /2009 எனது முகப்புத்தகத்தில் எழுதப்பட்ட கவிதை இது)