இயல்புக்குத் திரும்புகின்ற நகரம்
மனிதர்களை யாசிக்கிறது
தேவையுடன் இருக்கும் ஒரு
முதிய விபசாரியை போல...
தெருக்களில் சிதறிக்கிடக்கின்ற
மாநகரின் சிரிப்பு
அள்ளுவாருக்கு காத்திருக்கிறது
ஒரு குவியல் அலங்கோலமாக....
எதையோ அல்லது
ஏதையுமே மறைக்க முடியா
முகங்களைச் சுமக்கின்ற மனிதர்கள்
வெளிப்படத் தொடங்குகிறார்கள்
இயல்புக்குத் திரும்புகின்ற நகரத்தில்
இன்று குறித்தான எதிர்பார்ப்புகள்
கதவுகளின் தாள்ப்பாளினில்
தொங்கிகொண்டிருக்கின்றன – ஒரு சிலந்தி போல
குறுக்குச் செய்திகள் மறைந்திருக்கின்ற
தொலைக்காட்சியில் இருந்து
வெளிப்படுகிறது
அசுவாரசியத்தின் முகம்
இயல்புக்குத் திரும்புகின்ற நகரத்தின் மீது
ஒலிக்கிறது – ஒரு ஆலயத்தின் மணி
கேள்வியாக அல்லது
பதிலாக
மூடிக்கிடக்கும் தேநீர்க்கடைகளை
குறிகளின் பேரால் சபித்துக் கொண்டு கடப்பவர்கள்
அறியத்தருகிறார்கள்
ஒரு புணர்ச்சியை விட உயர்ந்தது ஒரு கோப்பைத் தேநீரென...
ஒரு நகரின் இயல்பை மறுத்தவர்களும்
அதைத் தடுத்தவர்களும் – தமக்கான நியாயங்களுடன்
ஓய்வெடுத்துக் கொள்ளும் பொழுதொன்றில்
இயல்புக்குத் திரும்பத் தொடங்குகிறது நகர்.
( ஹர்த்தால்கள் சூழ்ந்திருந்த 2006 ஆம் ஆண்டின் வவுனியாவின் நினைவுகளுக்கும் – ரோரண்ரோவின் சென்ற வார இறுதிக்கும்..)
Tuesday, June 29, 2010
Saturday, June 19, 2010
தேநீர்க் குறிப்புகளும் சில தவிப்புகளும்...
நம்மைச் சுமந்து பயணிக்கிறது பாதை
பகலும் இரவும் கலந்த நிறமொன்று நம்மிடம் ஒட்டியிருக்கிறது
நமக்கிடையில் - நம்மோடு அமர்கிறது
எல்லாமறிந்த மௌனம்
வேகத் தெருவில் கசிந்துகொண்டிருக்கிறது
மாமிசப் பசுக்களின் கண்கள்.
சிறகு முளைத்த கணங்கள்
இருவரிடமும் இருந்து பறந்து பறந்து
பெருஞ்சுவரில் முகம் அறைந்த பறவைகளாய் விழுகிறது
மீண்டும் மீண்டும்
சொற்களின் உரசலில் பட்டாம்பூச்சிகள் நிறமிழக்கின்றன
நக இடுக்கில் உருள்கிறது
நம்மை நாமே தேடிக் காயம் செய்த வார்த்தைகள்
சிறகு உதிர்த்த ஈசலினை போல
நம்மிடையே கணக்கற்று ஊர்கிறது
நம்மை வெளிப்படுத்தும் தருணங்கள்.
அறியப்பட வேண்டிய அவசரங்கள் ஏதுமின்றி
காத்திருக்கிறது - நம் வாழ்வும்
அடுத்த சிறுநகர் சந்திப்பில் நமக்கான தேநீரும்.
பகலும் இரவும் கலந்த நிறமொன்று நம்மிடம் ஒட்டியிருக்கிறது
நமக்கிடையில் - நம்மோடு அமர்கிறது
எல்லாமறிந்த மௌனம்
வேகத் தெருவில் கசிந்துகொண்டிருக்கிறது
மாமிசப் பசுக்களின் கண்கள்.
சிறகு முளைத்த கணங்கள்
இருவரிடமும் இருந்து பறந்து பறந்து
பெருஞ்சுவரில் முகம் அறைந்த பறவைகளாய் விழுகிறது
மீண்டும் மீண்டும்
சொற்களின் உரசலில் பட்டாம்பூச்சிகள் நிறமிழக்கின்றன
நக இடுக்கில் உருள்கிறது
நம்மை நாமே தேடிக் காயம் செய்த வார்த்தைகள்
சிறகு உதிர்த்த ஈசலினை போல
நம்மிடையே கணக்கற்று ஊர்கிறது
நம்மை வெளிப்படுத்தும் தருணங்கள்.
அறியப்பட வேண்டிய அவசரங்கள் ஏதுமின்றி
காத்திருக்கிறது - நம் வாழ்வும்
அடுத்த சிறுநகர் சந்திப்பில் நமக்கான தேநீரும்.
Subscribe to:
Posts (Atom)