Pages

Friday, July 30, 2010

சுவடுகளை பின் தொடர்தல்... 01

நினைவுச் சுவர்
மீது ஈசல் கால்களால்
ஊர்ந்து ஊர்ந்து
ஏறும் உன் இறகுதிர்த்த சுவடுகள்

நேற்றைய மணலில்
கால்புதைய நடக்கையில்
ஒட்டகத்தாடையில் அசைபோடப்படுகிறது....
நாம் முள் கிழித்த கள்ளிப் பூவொன்றின் கானம்

சுவடுகளின் சிறகில்
நினைவுகளின் பயணம்..
நானோர் பாதை தெரிந்த பயணியாகிறேன் -
சுவாரசியங்களற்று விரிகிறது வானம்

புன்னகைக்க தெரிந்த உதடுகளில்
வசீகரம் மிதத்தியது உன் வாசனை - பின்
கசப்பு சுரந்த கண்களில் நிறைந்தது
ஒரு கடல் கரிப்பு.

என் அறைதோறும் ஒளிர்ந்தன
உன் வார்த்தை மின்மினிகள்
இறப்பில் ஒளிர்தல் இழக்குமென அறியாச் சிறுபறவை
அதை அலகு கொத்தி பதித்தது மனசென்ற சுவர்

பேசித்தீரா நேசங்களை
பேசப் பேசத் தீர்ந்தது பொழுது
நம்மிடம் மொழி கற்றிருந்த
விண்மீன் கண்ணில் - விடிந்தது பகல்

பின்

பிரிந்து போன
பாதங்களில் இருந்தன..
பிரிக்க முடியாத சுவடுகள்
நீ என்றும் நான் என்றும்