Pages

Tuesday, August 31, 2010

திருமண வரவேற்பு தின வாழ்த்துக் கவிதை - சுதன் மதனிகா (23 .01 .2010)

பசை பூசிய ஞாபகச் சுவரெங்கும் நம் நட்பு மின்மினிகள்
அசை போடும் தருணங்களில்
அலையாகிறது நாம் இருந்த நிமிடங்கள்
துணை கொள்ள பிரியமான தோழன் சுதன் - மதனியோடு இணைகொண்டு சுகம் சேரும் நாளிது!

கவி கொண்டு வாழ்த்தினோம்!
நூறும் புகுக நலம் நாளும் மிகுக,
நற்றமிழெனவே அணி கொண்டு வாழ்க!

மாலையில் இணைந்தது இரண்டு மனங்கள்
நாணங்கள் இனித் தொடர்கின்ற தினங்கள்
நல்ல பேச்சு நலமான சிரிப்பு - வல்லமை உந்தன் எழுத்து
வில் வளைத்து வென்றனன் நங்கை - வாழ்த்துகள்

மதிமுகத்து மங்கையாம் மதனிகா
மதி நிறைந்த மணவாளன் சுதன்
மனதிணைந்த மணவிழாக்காட்சி
உங்கள் மகிழ்வுக்கிலக்கணம் மாங்கல்யசாட்சி

இவனோடு இவளாகி ...
சிவனோடு உமையாகி
சிறப்பான துணையாகி -
சீர் மிகுந்து நீர் வாழ்க

கவினூறும் பதினாறும் கொள்க!
கலைகொள்ளும் திறன்யாவும் வெல்க
உடலோடு உயிர்
கொண்டுறைக உங்கள்உளம்நாளும் இனிதாலே மல்க

அனுதினமும் நீங்கள் அன்றிலின் சிறகுகள்
உங்கள் அன்புக்கில்லை அடைக்கும் கதவுகள்
தாள் திறக்கும் காதலின் சாகரம் வாழ்வில்
இன்பத் தளிர் துளிர்க்கும் கைகளில் சீக்கிரம்

வாழ்த்துகள் வந்து நிதம் உம்மைப் பாடும்
வருங்காலம் வாழ்க்கைக்கோர் உவமை கொள்ள உம்மை தேடும் -

வாழ்க வாழ்க வாழ்கவென நெடிது வாழ்த்தி - விடைபெறும் நண்பர்கள் நாம்

.......................

அலை வந்து

மணல் கொண்டு போகும் - ஆனாலும்

கரை என்றும் கடலோடு வாழும்...

துயர் அடிக்க பிரிவதில்லை

பிரியத்தின் மலை

நம் விரல் இடுக்கில் நிரம்பியது

அன்பெனும் அலை

.............................

நீ என்பது நீல வானம்
நெஞ்சோடு
உதயங்களும் - அஸ்தமனங்களும்
உந்தனுக்கில்லை

Wednesday, August 25, 2010

இப்படியாய்ச் சில குரல்கள்........

ஞாபக இடுக்கில் துயர் தரும் நினைவுகளை
மறக்க விடிகிறது
அடுத்த நாள்

தண்ணிக் குடங்களின் நீண்ட வரிசையை
கால்களால் தட்டும் சிறுவனின்
நக இடுக்கில் கிடக்கிறது
கைகளால் கிண்டிய பதுங்குகுழிகளின்
பிடிமண் உலராமலும் உதிராமலும்..

பறக்கத் திராணியற்றுப்
பல்கிப்போன இலையான்கள் மரணிக்கின்றன -
நேற்றைய மனிதர்கள் போல

நாளைக்கு காய இருக்கும்
காயத்தின் பகுதியை தடவுகிறான்
ஒருவன் - இல்லாத கையால் ....

உலவ விடுங்கள், ஓட விடுங்கள், பழக விடுங்கள் என்ற
மருத்துவரின் அறிவுறுத்தல் பெற்ற
மனம் பிறழ்ந்த குழந்தையை சுமந்து மீண்டு(ம்) வருகிறது ஊர்தி
அதே முகாமுக்கு - அடுத்த குழந்தையை சுமக்க

ஒலிபெருக்கிகள் ஓய்ந்து விட்ட பொழுதில்
புதைகுழிகள் ஆரம்பித்திருக்கும் - எனினும்
ஒப்பிட்டு புறக்கணிக்க சொல்லித்தருகிறார்கள்
இப்போதைய மரணங்களை.

சகலமும் மரணித்திருந்த பொழுதொன்றில்..
நியாயங்கேட்கும் குரல்கள்
ஒலியில்லாதவை! நிறமில்லாதவை !!
அவை குரல்களாவே இராதவை !!!.

(முகப் புத்தகக் குறிப்புகள் - ஆனி 03 2009 )

..................

நாட்சருகில் கால் புதைய
நீள்பொழுது நடக்கையில்
கலையும்
நினைவுத் தோலுரித்து தூங்கும் சர்ப்பம்

இரண்டு சிரிப்புகளின் முடிவில்... ..

அபத்தமான கேள்விகளின் விளிம்பில்
அகப்படுவது நானானபோதிலும்.
விக்கிரமாதித்தன் வேதாளமாய்
கேள்விகள் என்னை விடுவதாயில்லை!!

ஒரு நாளின் உதிரும் மாலையில் உன்னைக் கேட்டேன்...
என் மனைவியை எப்படி வரைந்து வைத்தேன் தெரியுமா? -என்று
நீ சதாரணமாய்ச் சிரித்தாய்..

நானறிந்த இலக்கியமும்,
நன்கறிந்த சினிமாவும் கற்பனையில் ஊற ஊற
நானேதோ உளறியது நினைவில் இல்லை..

வினாடியின் விளிம்பில்
என் வாயில் வழிந்தது கேள்வி மீண்டும் ..

உனக்கு வரும் கணவனை......
கேள்வியை நான் முடிக்க முன்னும்
நீ சிரித்தாய்..

அது சாதாரணமாய் தோன்றவில்லை எனக்கு

Friday, August 20, 2010

சிறை கிடக்கும் சொற்கள்...

நன்று நன்று என்று
நாம் மகிழ்ந்த கவிதையின்
பொருளை தந்தது சிறைகிடந்த ஒரு சொல்


ஒரு சொல்லை சிறைவைத்துத்தான்
எமக்கான கவிதையை நீங்கள் எழுதுவீர்களானால் ....
அந்த கவிதை தேவையே இல்லை சகோதரனே!

மௌனம் எமக்கான வழக்கை பேசி முடிக்கட்டும்.
விதிக்கப்பட்டது குறித்து, விதி வருந்தட்டும்!

கவிதையின் அடைப்புள் ஒரு சொல் கிடக்குமெனில்
அதைவிட வேறென்ன விடுதலையை
கவிதை பேசிவிடப்போகிறது?

பெருந்துயரமாக இருக்கிறது அந்தச்
சொல்லின் சிறை குறித்து ...

எனக்கென்னவோ அந்தச் சொல்லின் சிறையில்
தமக்கான விடுதலையை எண்ணி
மற்றச் சொற்கள் மகிழ்வதாய் தோன்றுகிறது.

சகோதரனே!
உண்மையில் சிறை வைக்கப்பட்டிருக்கும்
அந்தச் சிறு சொல்லுக்கு - எதுவும் தெரியாது
கவிதை குறித்தும் கவிதைக்கு அதன் உபயோகம் குறித்தும்.

எழுதுகின்ற பெருந்தலைவ!
உனக்கு எப்படி எடுத்துச் சொல்வேன்?..
குழலை யாழை மேவும் பெருஞ்சொல்
மழலை என்று!.

(..மானுட, தேசிய, சமூக, பொருளாதார மீட்சிக்காய் உலகம் முழுதும் சிறை வைக்கப்படும் சிறு சொல்பேசிகளுக்கு..)