Pages

Tuesday, June 29, 2010

இயல்புக்குத் திரும்புகின்ற நகரம் பற்றிய குறிப்புகள்

இயல்புக்குத் திரும்புகின்ற நகரம்
மனிதர்களை யாசிக்கிறது
தேவையுடன் இருக்கும் ஒரு
முதிய விபசாரியை போல...

தெருக்களில் சிதறிக்கிடக்கின்ற
மாநகரின் சிரிப்பு
அள்ளுவாருக்கு காத்திருக்கிறது
ஒரு குவியல் அலங்கோலமாக....

எதையோ அல்லது
ஏதையுமே மறைக்க முடியா
முகங்களைச் சுமக்கின்ற மனிதர்கள்
வெளிப்படத் தொடங்குகிறார்கள்

இயல்புக்குத் திரும்புகின்ற நகரத்தில்
இன்று குறித்தான எதிர்பார்ப்புகள்
கதவுகளின் தாள்ப்பாளினில்
தொங்கிகொண்டிருக்கின்றன – ஒரு சிலந்தி போல

குறுக்குச் செய்திகள் மறைந்திருக்கின்ற
தொலைக்காட்சியில் இருந்து
வெளிப்படுகிறது
அசுவாரசியத்தின் முகம்

இயல்புக்குத் திரும்புகின்ற நகரத்தின் மீது
ஒலிக்கிறது – ஒரு ஆலயத்தின் மணி
கேள்வியாக அல்லது
பதிலாக

மூடிக்கிடக்கும் தேநீர்க்கடைகளை
குறிகளின் பேரால் சபித்துக் கொண்டு கடப்பவர்கள்
அறியத்தருகிறார்கள்
ஒரு புணர்ச்சியை விட உயர்ந்தது ஒரு கோப்பைத் தேநீரென...

ஒரு நகரின் இயல்பை மறுத்தவர்களும்
அதைத் தடுத்தவர்களும் – தமக்கான நியாயங்களுடன்
ஓய்வெடுத்துக் கொள்ளும் பொழுதொன்றில்
இயல்புக்குத் திரும்பத் தொடங்குகிறது நகர்.

( ஹர்த்தால்கள் சூழ்ந்திருந்த 2006 ஆம் ஆண்டின் வவுனியாவின் நினைவுகளுக்கும் – ரோரண்ரோவின் சென்ற வார இறுதிக்கும்..)

Saturday, June 19, 2010

தேநீர்க் குறிப்புகளும் சில தவிப்புகளும்...

நம்மைச் சுமந்து பயணிக்கிறது பாதை
பகலும் இரவும் கலந்த நிறமொன்று நம்மிடம் ஒட்டியிருக்கிறது
நமக்கிடையில் - நம்மோடு அமர்கிறது
எல்லாமறிந்த மௌனம்

வேகத் தெருவில் கசிந்துகொண்டிருக்கிறது
மாமிசப் பசுக்களின் கண்கள்.
சிறகு முளைத்த கணங்கள்
இருவரிடமும் இருந்து பறந்து பறந்து
பெருஞ்சுவரில் முகம் அறைந்த பறவைகளாய் விழுகிறது
மீண்டும் மீண்டும்

சொற்களின் உரசலில் பட்டாம்பூச்சிகள் நிறமிழக்கின்றன
நக இடுக்கில் உருள்கிறது
நம்மை நாமே தேடிக் காயம் செய்த வார்த்தைகள்
சிறகு உதிர்த்த ஈசலினை போல
நம்மிடையே கணக்கற்று ஊர்கிறது
நம்மை வெளிப்படுத்தும் தருணங்கள்.

அறியப்பட வேண்டிய அவசரங்கள் ஏதுமின்றி
காத்திருக்கிறது - நம் வாழ்வும்
அடுத்த சிறுநகர் சந்திப்பில் நமக்கான தேநீரும்.

Sunday, July 5, 2009

அப்பா, நான் மற்றும் நாக்கிழந்த பொம்மை நாய்க்குட்டி..

அப்பா...!
நமக்கான புரிதல்களின் முரணை பேச இருக்கிறது
அம்மாவும் அறியாமல்...

எனது நான்காம் வயதில்
எனக்கு தந்த குரைக்கும் நாக்குட்டிப் பொம்மையை
எனக்கு பிடிக்காது போன தருணத்தில்
அதன் சிவத்த நாக்கை பிடுங்கி மழையில் எறிந்தேன்
நாக்கு மழையில் நீந்தித் தொலைந்த போதும்
நாய்க்குட்டி குரைத்துக் கொண்டேயிருந்தது!

பிற்பாடு ...
ஏனென்று தெரியாத பிரியங்களின் வரட்சி
சொற்களின் நாக்கை பிடுங்கி எறிந்தபோதும்
நமக்கான இடைவெளிகளை
நமது சகோதரிமார் நிரப்பிக்கொண்டபோதும்
நான் பேச இருந்தது உண்டு உன்னோடு
பேசாமல் மறந்ததுண்டு என்னோடு

நாங்கள் பேசிய இரவுதனில்
என்னோடும் உன்னோடும் எச்சில் வைத்த மிச்சத் தேநீரை பருகியபடி அழையா விருந்தாளியாய் அமர்ந்திருந்தது மரணம்!

வைத்தியசாலைகளின் இரவுகள் உணர்தலால் ஆனவை
அந்த இரவுகளுக்கு புலன்கள் இருந்தன
என் தகப்பனாய் நீ என்னைப் பேசினாய்
நமக்கான தருணங்களில் மௌனமாய் இருந்தது மரணம்
எமக்கான வரட்சியில் கண்ணீரை சிந்தினோம்.

உறவின் தொடர்ச்சி ஒரு நாய்க்குட்டியை போல
குரைத்துக்கொண்டே இருக்கிறது
நாக்குகள் குறித்த கவலைகள் அற்று..

Tuesday, June 9, 2009

ஊமை வாக்குமூலங்கள்!

சொல்லின் நிழலில் தூங்கும்
மௌனங்கள்
வெளியறத் தவிக்கும் தருணமொன்றில்

புரிதல் அற்ற பெருவெளியில்
புன்னகைகள் காய்ந்திருக்கும்
பொழுதொன்றில்

அவமானங்கள் வழிந்திருக்கும்
முகமதனை - விம்பமிட எந்த ஆடியும்
மறுக்கும் ஒரு கணத்தில்

சொல்லாமல் சேர்த்த சொல்லெல்லாம்
பூப்பெய்தி பின் புனிதங்கள்
கலைந்திருக்கும் காலமொன்றில்

ஒரு வார்த்தை தன்னை பேசிவிட துடிக்கிறது தயக்கங்களுடன்..