நம்மைச் சுமந்து பயணிக்கிறது பாதை
பகலும் இரவும் கலந்த நிறமொன்று நம்மிடம் ஒட்டியிருக்கிறது
நமக்கிடையில் - நம்மோடு அமர்கிறது
எல்லாமறிந்த மௌனம்
வேகத் தெருவில் கசிந்துகொண்டிருக்கிறது
மாமிசப் பசுக்களின் கண்கள்.
சிறகு முளைத்த கணங்கள்
இருவரிடமும் இருந்து பறந்து பறந்து
பெருஞ்சுவரில் முகம் அறைந்த பறவைகளாய் விழுகிறது
மீண்டும் மீண்டும்
சொற்களின் உரசலில் பட்டாம்பூச்சிகள் நிறமிழக்கின்றன
நக இடுக்கில் உருள்கிறது
நம்மை நாமே தேடிக் காயம் செய்த வார்த்தைகள்
சிறகு உதிர்த்த ஈசலினை போல
நம்மிடையே கணக்கற்று ஊர்கிறது
நம்மை வெளிப்படுத்தும் தருணங்கள்.
அறியப்பட வேண்டிய அவசரங்கள் ஏதுமின்றி
காத்திருக்கிறது - நம் வாழ்வும்
அடுத்த சிறுநகர் சந்திப்பில் நமக்கான தேநீரும்.
No comments:
Post a Comment